இன்று பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ) நினைவு நாள் - நவம்பர் 2, 1903. இவர் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு பங்கு வகித்தவரும் ஆவார். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இதுபோல் வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் எப்போதுமே பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: "புருவங்கள் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் இன்னும்கூட நான். வாழ்ந்து கொண்டுதான் உள்ளேன். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே." தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம்

No comments:
Post a Comment